வண்ணங்கள் மனிதனின் வரம்


            வண்ணங்கள் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கம். வண்ணங்களில் இருந்து மனிதனை தனியாக பிரிக்க முடியாது. வண்ணங்களை நாம் பார்த்து ரசிக்க நமக்கு உதவி செய்வது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் நாம் வண்ணங்களை பார்க்க முடியாது.

           நிலவின் ஒளியில் நாம் பார்க்கும் எல்லாப் பொருளும் சாம்பல் நிறமாகவே தெரியும். போதுமான ஒளி இல்லை என்றாலும் பார்வை தெரியும். ஆனால் இயற்கையான நிறங்களை உணர முடியாது. சூரியன் தான் வண்ணங்களை ரசிக்க உதவுகிறது. முழு இருட்டில் நம்மால் எதையுமே பார்க்க முடியாது.
            ஆந்தைக்கும் சில வன விலங்குகளுக்கும் நம்மை விட இருட்டில் நன்றாக பார்க்கும் திறன் உண்டு. ஆனால் நிறங்களை பிரித்துப் பார்க்கும் திறன் மனிதனுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும், ஒரு சில பறவைகளுக்கும் மட்டுமே உண்டு.  மற்ற எல்லா உயிரினங்களுக்குமே அந்த காலத்து சினிமாப் படம் மாதிரி எல்லாமே கறுப்பு வெள்ளையில் தான் தெரியும். மனிதன் கொடுத்து வைத்தவன். அதனால் தான் அவனால் வண்ணங்களை உணர முடிகிறது. வண்ணங்கள் இல்லாத மனித வாழ்வு கொடுமையான ஒன்று. அந்த அளவுக்கு வண்ணங்கள் மனிதனோடு இணைந்து இருக்கின்றன.
            நிறங்களை பிரித்து உணர உதவும் செல்கள் சரியாக செயல்படவில்லை என்றால், மனிதர்களாலும் கலர் பார்க்க முடியாது. இந்த செல்கள் ஓரளவு செயல் இழந்திருக்கும் போது சில வண்ணங்கள் மட்டும் தெரியாது. இதை நிறக்குருடு என்கிறார்கள்.
             கண்ணின் அதிசயம் அதன் லென்சில் தான் இருக்கிறது. புரதம் நிரம்பிய ஓவல் வடிவில் இருக்கும் இந்த சின்ன உறையான லென்சை சுற்றி தசைகள் உள்ளன. மிகவும் உறுதியான இந்த தசைகள் மிகக்கடுமையான உழைப்பாளிகள். இவை கெட்டிபடும் போது லென்ஸ் பருத்து, தடிமனாகி பக்கத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது. தசைகள் ரிலாக்ஸ் ஆகும் போது தட்டையாகி லென்ஸ் மெலிதாகி விடும். இதனால் தூரத்தில் இருக்கும் பொருட்களை சுலபமாகப் பார்க்க முடிகிறது.
             ஆதி மனிதனுக்கு விலங்குகளிடம் இருந்து தப்பிக்க, இரையை தேடி ஓட மட்டுமே பார்வை தேவைப்பட்டது. அதனால் குறைந்தபட்சம் 20 அடிக்கு அப்பால் உள்ள பொருட்களைச் சுலபமாக பார்க்க முடிந்தாலே போதும். இதனால் அக்கால மனிதனின் கண் தசைகள் ஓய்வாகவே இருந்தன. ஆனால் இன்றைய மனிதனின் நிலைமை வேறு. இன்றைய சூழ்நிலையில் படிப்பது, டேபிளில் கணக்கு எழுதுவது, கம்ப்யூட்டர் பார்ப்பது என்று எப்போதுமே அருகில் இருக்கும் பொருட்களை உற்றுப்பார்ப்பதே வேலையாகிப் போய் விட்டது. தொடர்ந்து ‘குளோசப்‘ வேலைகளையே அதிகம் செய்ய வேண்டியிருப்பதால் கண்தசைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக்கின்றன. கண்கள் விரைவில் களைப்படைந்து சோர்வடைய இதுவே காரணம்.
                லென்சின் முன்னும் பின்னும் திரவம் நிரம்பிய இரண்டு பகுதிகள் உள்ளன. முன்னால் இருக்கும் திரவம் தண்ணீர் போலவும், பின்னால் இருப்பது முட்டையின் வெள்ளைக்கரு போலவும் இருக்கும். ஒரு பொருளை நாம் பார்க்கும் போது இந்த இரு திரவப்பகுதிகளையும் நடுவில் இருக்கும் லென்சையும் கடந்து ரெடினா என்ற திரையில் பதியும் ஒளி தான் மூளைக்குப் போகிறது.
                தலையின் பின்பக்கத்தில் பலமான அடிபட்டால் அங்கிருக்கும் மூளையின் பார்வை பகுதிகளை தாக்கும். அதனால் நிரந்தரமாக பார்வை பறிபோகும் வாய்ப்பும் நிறைய இருக்கிறது. அதனால் தான் டூவீலரில் போகும் போது ஹெல்மெட் அணிவது தலைக்காயத்தில் இருந்து மட்டுமல்ல பார்வையை காப்பாற்றும் கவசம் என்பதும் உண்மையாகிறது.

0 comments:

கருத்துரையிடுக